நாளை முதல் உயர்த்தப்பட்ட புதிய சொத்துவரி வசூல்
சென்னை மாநகராட்சி பகுதியில் சொத்துவரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகள், வணிக கட்டிடங்கள் என அனைத்து சொத்துக்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரி வருடத்திற்கு அரையாண்டு வீதம் வருடத்திற்கு 2 முறை வசூலிக்கப்படுகிறது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை முதல் அரையாண்டும் அக்டோபர் முதல் மார்ச் வரை இரண்டாவது அரையாண்டும் கணக்கிடப்படுகிறது.
சொத்து வரி உயர்த்தப்பட்டதையொட்டி உரிமையாளர்களுக்கு சுயமதிப்பீடு விண்ணப்ப படிவம் வினியோகிக்கப்பட்டது. சொத்து வரி சுயவிவரங்களை பெற்று அதன் அடிப்படையில் வரியினை நிர்ணயிக்க மாநகராட்சி முடிவு செய்தது. அதன் அடிப்படையில் அனைத்து சொத்து உரிமையாளர்களுக்கும் படிவம் வழங்கப்பட்டது. அதனை சமர்பிக்க நேற்று கடைசி நாளாகும்.
நேற்று நள்ளிரவு சொத்து வரி சுயமதிப்பீடு படிவத்தினை தாக்கல் செய்தனர். மாநகராட்சி வார்டு அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள் இரவு வரை செயல்பட்டன.
இதுவரையில் பெறப்பட்டு வந்த படிவங்களில் உள்ள தகவல்கள் உடனடியாக கம்ப்யூட்டரில் பதிவு செய்தனர். ஏற்கனவே உள்ளதை விட கூடுதலாக கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தாலோ, மாடியில் வீடுகள் கட்டி இருந்தாலே புதிய மதிப்பீடு செய்யப்பட்டு வரி நிர்ணயம் செய்யப்படுகிறது.
நேற்று இரவு வரை 8 லட்சம் பேர் விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர். அவர்களில் ஒன்றரை லட்சம் பேர் ஆன்லைனில் தாக்கல் செய்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், 12 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். இதில் 8 லட்சம் பேர் மாநகராட்சியில் சொத்துவரி சுயமதிப்பீடு படிவத்தை தாக்கல் செய்துள்ளனர். இனியும் கால அவகாசம் கொடுக்க வாய்ப்பு இல்லை.
அதனால் நாளை முதல் உயர்த்தப்பட்ட சொத்துவரி வசூலிக்கப்படும். முதல் அரையாண்டு வரியினை முன்னதாக செலுத்தி இருந்தாலும் உயர்த்தப்பட்ட சொத்து வரியின் வித்தியாச தொகையினை உரிமையாளர்கள் செலுத்த வேண்டும் என்றார்.